ஹாங்சோ: ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் உள்ள லோட்டஸ் மைதானத்தில் செப்டம்பர் 23ம் தேதி வண்ணமயமான நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்தியா இன்று தனது முதல் தங்கத்தை வென்றது. மேலும் இன்று, துடுப்புப் படகு செலுத்துதல் போட்டி பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீ ஏர் ரைபிள் ஆடவர் தனிநபர் போட்டியில் ஐஸ்வர்ய் தோமர் வெண்கலம் வென்றார்.
இதன்மூலம், இரண்டு நாட்களில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் உள்பட 9 பதக்கங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. இலங்கை மகளிர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 46, ஜெஸ்சிகா 42 ரன்கள் எடுத்தனர்.
இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஆசிய விளையாட்டு பெரிய அளவிலான போட்டியாக திகழ்கிறது. 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போடடியில் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். வரும் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து 655 பேர் பங்கேற்றுள்ளனர். முதல் முறையாக ஆசிய போட்டிகள் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது.