Thursday, May 16, 2024
Home » ராகுல்காந்தி தலையீட்டால் அசோக் கெலாட்-சச்சின் பைலட் சமாதானம்: இருவரும் இணைந்த போஸ்டரால் ராஜஸ்தான் தேர்தலில் பரபரப்பு

ராகுல்காந்தி தலையீட்டால் அசோக் கெலாட்-சச்சின் பைலட் சமாதானம்: இருவரும் இணைந்த போஸ்டரால் ராஜஸ்தான் தேர்தலில் பரபரப்பு

by Neethimaan

ஜெய்ப்பூர்: 200 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில், வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போது முதல்வராக உள்ள அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் திமுக அறிவித்த இலவச வாக்குறுதி பாணியை, கர்நாடகாவை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை, இலவசத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த ஒன்றிய பாஜகவே, தற்போது 5 மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் ஆகியோரிடம் மோதல் வெடித்து வந்தது. இருவரையும் ராகுல் காந்தி எம்பி சமாதானப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது, இருவரும் இணைந்த போஸ்டர்கள் ராஜஸ்தானில் அதிர வைக்கிறது. இதுகுறித்து சச்சின் பைலட் கூறுகையில், ‘முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை. தேர்தலில் வெற்றிபெறுவதுதான் முக்கிய குறிக்கோள், முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின் எம்எல்ஏக்கள் முடிவு செய்வார்கள். இளைஞர்கள் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதுதான் எமது விருப்பம். கடந்த காலங்களில் அசோக் கெலாட்டுடன் மோதல் இருந்தது. இப்போது ஒற்றுமையாக இருக்கிறோம். ’மறப்போம்.. மன்னிப்போம்.. முன்னேறுவோம்’ என்பதுதான் எங்களது கோஷமாகும். தனிப்பட்ட நபர்களைவிட கட்சியும், பொதுமக்களும்தான் எங்களுக்கு முக்கியம்’ என்றார். இதற்கு முன்பு அசோக் கெலாட்டும் படம் ஒன்றை பகிர்ந்து, ’ஒன்றாக, நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம்’ என பதிவிட்டிருந்தார். இதையேதான் ராகுல் காந்தியும், ‘நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், ஒன்றாக இருப்போம்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெறும்” என தெரிவித்திருந்தார். முன்னதாக, கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்புவரை, முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் நீடித்தது. அப்போதுகூட டி.கே.சிவக்குமார், ‘முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை’ என்றார். பின்னர் தேர்தலை முன்னிட்டு இருவரையும் ராகுல்காந்தி சமாதானப்படுத்தினார். ராகுலின் வியூகம் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெற்றிக்கு பின், முதல்வர் போட்டியில் சிக்கல் எழுந்தது. சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் டெல்லியில் தங்கி மூத்த தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சில சாதகமான பயன்கள் இருவருக்கும் அளிக்கப்பட்டது. அதன்பிறகே, அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி சுமுகமாக நடைபெற்று வருவதுடன் சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் உள்ளார்.

இதே பாணியைத்தான் ராஜஸ்தானிலும் ராகுல் காந்தி கையில் எடுத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு பின்னும் இதுதான் நடக்கும் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதேநேரத்தில், அசோக் கெலாட் ஆதரவு தொகுதிகளில் சச்சின் பைலட் பிரசாரம் செய்யவில்லை என்றும், அதுபோல் சச்சின் பைலட் ஆதரவு தொகுதிகளில் அசோக் கெலாட் பிரசாரம் செய்யவில்லை என்ற தகவலும் எழுந்துள்ளது. இதனால், இருதரப்பிலும் மனதுக்குள் வன்மம் இருப்பதாகவே காங்கிரசார் தெரிவிக்கின்றனர். ஒருவேளை காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றிபெற்றால் மோதல் மிக பெரிய அளவில் வெடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

5 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi