சென்னை: அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் நடைபெறவுள்ள 7வது சித்தர் தின விழா, நாளை தொடங்க உள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 7வது சித்தர் தின விழா-2023, நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை காலை 10 மணியளவில் விழாவை துவக்கி வைக்கிறார். அரசு சித்த மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் இணந்து ஏற்பாடு செய்யும் இந்த 2 நாள் நிகழ்ச்சியில், 400க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைச் செடிகள், பாரம்பரிய உணவு வகைகள், உயர் ரக நெல் வகைகள், சித்த மருந்து செய்வதற்கான மூலிகை சரக்குகள், தாதுக்கள மற்றும் கருவிகள், பொதுமக்களுக்கு கண்காட்சியாக வைக்கப்படவுள்ளது. அத்துடன் இலவச மருத்துவ முகாம், வர்ம சிகிச்சை, யோகா பயிற்சி செயல் விளக்கம், நோயின்றி வாழ சித்தர் வாழ்வியல் முறைகளின் விளக்கவுரை ஆகியவையும் இடம்பெறவுள்ளன. சித்த மருந்துகள் அங்காடி, மூலிகை உணவு அங்காடிகளும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்படவுள்ளன. மணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறும். விழாவில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கல்லூரி முதல்வர் கனக வள்ளி தெரிவித்துள்ளார்.
அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 7வது சித்தர் தின விழா நாளை தொடக்கம்
previous post