சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் கடைசியாக கைது செய்யப்பட்ட இயக்குனர் தீபக் பிரசாத் ரூ.61 கோடி அளவுக்கும் பொதுமக்களிடம் வசூல் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக கூறி சுமார் ஒரு லட்ச முதலீட்டாளர்களிடம் ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்து 22 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் முக்கிய நிர்வாகிகள் 4 பேரில் ஒருவரான தீபக் பிரசாத் கடந்த 8-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார் 2-வது முறையாக அவரை காவலில் எடுத்து விசாரித்த போது ரூ.62 கோடி அளவிற்கு பொதுமக்களிடம் பணத்தை வசூலித்து மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இந்த ரூ.62 கோடியில் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை போலீசார் பட்டியலிட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். அடுத்ததாக முகவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கனவே 300 முகவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் எஞ்சியவர்களையும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். விசாரணைக்கு பிறகு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.