சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல முக்கிய நிறுவனர்கள், தரகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் தொடர்பிருப்பதாக கூறி நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அந்த சம்மனுக்கு இதுவரை அவர் ஆஜராகாமல் இருந்துள்ளார். தொடர்ந்து அவர் தொடப்பட்டும் வரும் நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கும் ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும் எந்தமாதிரியான தொடர்பு உள்ளது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தவே நேரில் ஆஜராக வேண்டும் என தொடர்ந்து தெரிவித்தும் அவர் நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர்களை அனுப்பி விளக்கங்களை அனுப்புவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வழக்கறிஞர்கள் கொடுக்கும் விளக்கங்களை ஏற்க மறுத்த பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளனர். நேரில் விசாரணை நடத்தும் போது தான் தொடர்புகள் குறித்து தெரியவரும் என்பதன் அடிப்படையில், அதிகாரிகள் நேரில் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
தொடர்ந்து ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக பொருளாதார குற்றபுரிவு அதிகாரிகள் மட்டுமல்லாமல், பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் மத்திய விசாரணை அமைப்புகளும் தங்களது விசாரணையை துவங்கியுள்ளன.