சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3ம் தேதி, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கவுரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும். கலைஞர் எழுதுகோல் விருதிற்கான தகுதிகள் பின்வருமாறு: தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும். பத்திரிகை பணியை முழுநேர பணியாகக் கொண்டிருக்க வேண்டும்.
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாடு, பெண்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது. விண்ணப்பங்களை, இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை 600009 என்ற முகவரிக்கு ஏப்.30ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.