Sunday, June 16, 2024
Home » கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு: எம்எல்ஏக்கள் சா.மு.நாசர், கிருஷ்ணசாமி பங்கேற்பு

கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு: எம்எல்ஏக்கள் சா.மு.நாசர், கிருஷ்ணசாமி பங்கேற்பு

by Ranjith

திருவள்ளூர்: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளும், அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருவள்ளூர்: திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலக வளாகத்தில் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட அவைத் தலைவர் திராவிடபக்தன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆதிசேசன், மாவட்ட துணைச் செயலாளரும், நகர மன்ற தலைவருமான உதயமலர் பாண்டியன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள், நகர நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணை பெருந்தலைவர் பர்கத்துல்லா கான் ஆகியோர் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியகுழு தலைவர் பூவை ஜெயக்குமார் கலைஞரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றியகுழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய ஆணையர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் காக்களூரில் திருவள்ளூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ் ஆகியோர் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணி பேரூர் திமுக சார்பில் ஆரணி பேருந்து நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஆரணி பேரூர் செயலாளர் முத்து தலைமையில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய, மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. முன்னதாக ஆரணி பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு பேரூர் செயலாளர் முத்து தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் அவைத் தலைவர் வழக்கறிஞர் ரமேஷ், பேரூர் பொருளாளர் கரிகாலன், துணைச் செயலாளர் கோபிநாத்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆவடி : கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஆவடியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற அமைதி ஊர்வலம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராமரத்னா திரையரங்கம் எதிரே உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. அங்கு கலைஞரின் உருவப் படத்திற்கு சா.மு.நாசர் எம்எல்ஏ மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் நடுக்குத்தகை ரமேஷ், ஆவடி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகரப் பொறுப்பாளர் சன் பிரகாஷ், பகுதிச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி: பூந்தமல்லி கரையான்சாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமலை தலைமை தாங்கினார். பூந்தமல்லி நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், நகர அவை தலைவர் பூவைதாஜுதீன், நகர, மாவட்ட நிர்வாகிகள் துரை பாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டில்லி ராணி மலர்மன்னன், அசோக் குமார், லயன் சுதாகர், புண்ணியகோட்டி, அன்பழகன், சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, ஆதி திராவிட நலக்குழு மாநிலச் செயலாளர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் நகர செயலாளர் திருமலை ஏற்பாட்டில் ஆயிரம் பேருக்கு பிரியாணியை எம்எல்ஏக்கள் வழங்கினர். இதையடுத்து பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், மாவட்ட துணை செயலாளர் காயத்ரி, ஒன்றிய செயலாளர் கமலேஷ், மற்றும் திமுக கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். கலைஞரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு லயன் சுதாகர் ஏற்பாட்டில் ஆயிரம் பேருக்கு பிரியாணியை எம்எல்ஏக்கள் வழங்கினர்.

இதே போல பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் கலைஞருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் நகர திமுக சார்பில், கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பேரூர் திமுக சார்பில் பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல் தலைமையில் நான்கு முனை சந்திப்பில் உள்ள அண்ணாசிலை, அம்பேத்கர் நகர், பேரூராட்சி அலுவலகம் எதிரிலும் கலைஞரின் உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், அவைத்தலைவர் வெங்கடேசன், துணைச்செயலாளர்கள் திரிபுர சுந்தரி, பார்த்திபன், பொருளாளர் ஜெயராமன், கவுன்சிலர்கள் கோகுல்கிருஷ்ணன், கோல்டுமணி, ஆப்தாப்பேகம், இந்துமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். பூண்டி: பூண்டி வடக்கு ஒன்றியம் சீத்தஞ்சேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜான் பொன்னுசாமி தலைமையில் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் ஊராட்சி தலைவர்கள் ஆகியோர் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பூண்டி கிழக்கு ஒன்றியம் கச்சூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் பொன்னுசாமி ஆகியோர் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பிற்பகல் 1 மணிக்கு ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினர். இதில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் சிவய்யா, குப்பையா, யோவான், ரவி, முனுசாமி, தில்லைகுமார், வெங்கடாதிரி, குப்பன், நாகராஜ், சித்ராபாபு, சுரேஷ், நளாயிணி, சலபதி கேசவன், சீனிவாசலு, தாமோதரன், சரசு பூபாலன், விஜயன், யுகேந்தர், உட்பட பலர் கலந்துகொண்டனர். எல்லாபுரம் ஒன்றியம்: எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் பி.ஜெ.மூர்த்தி தலைமையில் ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சித்ரா முனுசாமி, வக்கில் சீனிவாசன், முகம்மது மொய்தீன், தனசேகர், சம்பத் ஆகியோர் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் 24 ஊராட்சிகளில் கலைஞர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதே போல் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமையில் கன்னிகைப்பேர் மற்றும் 19 ஊராட்சிகளில் கலைஞர் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல், மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். எல்லாபுரம் மத்திய ஒன்றியத்தில் வாணியன் சத்திரம், கோடுவெளி, வெங்கல், தாமரைப்பாக்கம் உட்பட 10 ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளர் தங்கம் முளி தலைமையில் கலைஞர் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட துணைச்செயலாளர் சீனிவாசன், குமார், பாஸ்கர், பாஸ்கர், ரகு உள்ளிட்டோர் கலந்து கெண்டனர்.

You may also like

Leave a Comment

16 + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi