சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தற்போது 1 கோடியே 13 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதிக்குள் இந்த தொகை பெண்களுக்கு வங்கிகள் மூலம் கிடைக்கிறது.
இந்த நிலையில், ஏற்கனவே விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 வாரங்களுக்கு முன் அறிவித்தார். இதன்படி விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீது வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
இதில் மேல்முறையீடு செய்ததில் மேலும் சிலர் இந்த திட்டத்தில் சேர்வதற்கான தகுதிஉடையவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை இறுதி செய்யும் பணி இந்த மாதம் இறுதி வரை நடைபெறும். இதையடுத்து டிசம்பர் மாதம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பி வைக்கப்பட்டு, டிசம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.