வால்பாறை : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வால்பாறையில் வால்பாறை நகர திமுக சார்பில் தென்னிந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.
நேற்று காலை 11 மணி அளவில், வால்பாறை அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கி மாலை வரை பல்வேறு சுற்றுகள் நடைபெற்றது. முன்னதாக, போட்டிகளை திமுக நகர செயலாளர் சுதாகர், திமுக நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் துவங்கி வைத்தனர்.
தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில வீரர்கள் 100க்கும் அதிகமானோர் பல்வேறு சுற்று போட்டிகளில் பங்கேற்றனர். சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்பட பலர் பந்தயத்தில் பங்கேற்றனர். இப்போட்டிகளை வால்பாறை பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். இதைத்தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு திமுக சார்பாக கேடயம், ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.