சென்னை: அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு மவுன ஊர்வலம்..போக்குவரத்து தடையின்றி செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 03.02.2024 அன்று, சுமார் 08.00 மணியளவில், தமிழ்நாடு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக கட்சி உறுப்பினர்கள் அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையிலிருந்து மெரினா கடற்கரை அருகே உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு மவுன ஊர்வலம் செல்ல உள்ளனர்.
எனவே மேற்படி சாலைகளில் போக்குவரத்து தடையின்றி செல்ல சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, எனினும் தேவைப்பட்டால் போர் நினைவிடத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கொடி மரச்சாலை வழியாகவும், காந்தி சிலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை சந்திப்பில் இருந்து பாரதி சாலை வழியாகவும் திருப்பி விடப்படும்.
மேலும் அண்ணாசாலையில் இருந்து வாலாஜா சாலையை நோக்கி ஊர்வலம் செல்லும்போது அண்ணா சிலையிலிருந்து, பெரியார் சிலையை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்படும். மேலும் வாலாஜா சாலை, அண்ணாசாலை, டேம்ஸ் ரோடு, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு இந்த சாலைகளை தவிர்த்து மாற்று பாதையில் சென்று தங்களது இலக்கை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.