குருகிராம்: அரியானா கலவரத்தில் தவறான தகவல் வெளியிட்டதாக கூறி சுதர்சன் நியூஸின் ரெசிடென்ட் எடிட்டர் முகேஷ் குமார் கைது செய்யப்பட்டார். அரியானாவில் ஜூலை 31 அன்று விஷ்வ இந்து பரிசத் நடத்திய பேரணியை இன்னொரு தரப்பினர் மறித்ததால் கலவரம் வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக இதுவரை 393 பேர் கைது செய்யப்பட்டு 118 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வகுப்புவாத வன்முறைகள் குறித்து சமூக ஊடகங்களில் எரிச்சலூட்டும் பதிவுகளைப் பகிர்ந்ததாகக் கூறி, இந்தி செய்தி சேனல் சுதர்சன் நியூசின் ரெசிடென்ட் எடிட்டர் குருகிராம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குருகிராமில் உள்ள செக்டார் 17ல் உள்ள சைபர் கிரைம் போலீசாரால் முகேஷ் குமார் கைது செய்யப்பட்டதாக குருகிராம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இதற்கிடையே அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் பசு மாடு கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். மஹூ கிராமத்துக்கு அருகே டெல்லி மும்பை தேசிய விரைவு சாலையில் பசு மாடு கடத்தி சென்ற ஒரு வாகனத்தை காவல்துறை துரத்தி சென்றது. அப்போது காவல்துறை வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பதிலுக்கு காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பசு மாடுகளை கடத்தி சென்ற வாகனத்தில் இருந்த தௌபிக் என்பவர் காயமடைந்தார். உடனே அந்த வாகனத்தை மடக்கி பிடித்து தௌபிக்கை கைது செய்தனர். வாகனத்தில் இருந்த 21 மாடுகளை மீட்ட காவல்துறையினர் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.