பியூனஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினாவில் பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் தலைநகரமே ஸ்தம்பித்தது. நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் அர்ஜெண்டினா நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பொது பல்கலைக்கழகங்களுக்கான நிதியை குறைத்து அரசு அறிவித்துள்ளது. இதனால் இலவச இளங்கலை கல்வி வழங்கும் புகழ்மிக்க பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பொது பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு தரப்பில் விளக்கம் அளித்தும் அதனை ஏற்காத மாணவர் சங்கங்கள் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கண்டன பேரணி நடத்தினர். பியூனஸ் அயர்ஸ் சாலைகளில் ஒரே நேரத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன், அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தை பறிக்காதீர் உள்ளிட்ட பதாகைகளுடன் பேரணி நடத்தினர்.