திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காட்டுக்கானநல்லூர், அர்ஜூனாபுரம், சந்தவாசல் ஆகிய மலைப்பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட போலீசார் 5 குழுக்களாக பிரிந்து தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பவர்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் ஆரணி உட்கோட்டத்தில் இதுவரை களம்பூர் காவல்நிலையம், கண்ணமங்கலம், சந்தவாசல் ஆகிய காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்டோர் மீது கள்ளச்சாராயம் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஆரணி டிஎஸ்பி ரவிசந்திரன் தலைமையில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை தேடி வருகின்றனர். இன்று காலை 60க்கும் மேற்பட்ட காவலர்கள் காட்டுகொன்னூர், சந்தவாசல் பகுதி, அர்ஜூனாபுரம் ஆகிய மலை பகுதிகளில் சாராயம் விற்பவர்கள் மற்றும் காய்ச்சுபவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ட்ரோன் கேமரா மூலமும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.