ஆரணி : ஆரணி நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தில் உள்ள முள்ளிப்பட்டு புறவழிசாலையில் 2023-2024ம் ஆண்டு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பில் முள்ளிப்பட்டு பகுதியில் இருந்து ஆரணி- எட்டிவாடி சாலையில் 4.2 கி.மீ வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
இதேபோல், ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் உள்ள ஆரணி புறவழிச்சாலையில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2023-2024ம் ஆண்டு ரூ.5 கோடி மதிப்பில் இரும்பேட்டில் இருந்து முள்ளிப்பட்டு வரையுள்ள 5 கிலோ மீட்டர் வரை ஆரணி புறவழிச்சாலையில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், முள்ளிப்பட்டு புறவழிச்சாலையில் உள்ள ஆரணி-எட்டிவாடி, ஆரணி புறவழிச்சாலையில் உள்ள இரும்பேடு-முள்ளிப்பட்டு வரை 9.2 கிலோ மீட்டர் வரை மொத்தம் ரூ.35 கோடி மதிப்பில் சாலைகள் அகலப்படுத்தி தார்சாலைகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை செய்யாறு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜகணபதி நேற்று அதிகாரிகளுடன்
நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, சாலைகள் அகலப்படுத்தப்பட்டு அமைத்துள்ள தார்சாலைகள் சரியான அளவில் உள்ளதா? மற்றும் அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். அப்போது, உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், இளநிலை பொறியாளர் செந்தில்குமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.