புதுடெல்லி: ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கியதை எதிர்த்து ஆந்திர அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவி வகித்தபோது திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், அரசு கரூவூலத்துக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான வழக்கில் சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ம் தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். கண்புரை அறுவை சிகிச்சைக்காக அக்டோபர் 31ம் தேதி 4 வாரகால இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், இடைக்கால ஜாமீனை சாதாரண ஜாமீனாக ஆந்திர உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் மாற்றியது. இதற்கிடையே உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளது.