சண்டிகர்: அரியானா பாஜ பெண் எம்பியின் கணவரான ஐபிஎஸ் அதிகாரியை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரியானா மாநிலம் சிர்சா தொகுதி பா.ஜ எம்பி சுனிதா துக்கல். இவரது கணவர் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் துக்கல். தற்போது இவர் குருகிராம் காவல்துறை இணைஆணையராக உள்ளார். மே 25ம் தேதி அரியானாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சுனிதா துக்கலின் கணவரை தேர்தல் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் துக்கலை தேர்தல் பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அவரை பஞ்ச்குலாவில் உள்ள காவல்துறைத் தலைமையகத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளராக உடனடியாக நியமித்து அரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அரியானா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடியும் வரை அவருக்கு தேர்தல் தொடர்பான பணிகள் எதுவும் ஒதுக்கப்பட மாட்டாது என்று கூடுதல் தலைமைச் செயலாளர் டி.வி.எஸ்.என் பிரசாத் தெரிவித்துள்ளார்.