புழல்: ஆசன வாயில் கஞ்சாவை மறைத்துவைத்து கடத்திய கைதிகள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை மற்றும் மகளிர் ஆகிய சிறைகளில் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் போதை பொருட்கள் கடத்தல் என பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவைகளை சிறை காவலர்கள் சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். இதுபோல் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களையும் கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில், விசாரணை சிறையில் மருத்துவமனை தொகுதியில் சிறை காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உள்ளாடையில் மறைத்துவைத்திருந்த சுமார் 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வழிப்பறி வழக்கில் சிறையில் உள்ள வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அப்துல்ஜாபர் என்பவர் ஆசனவாயில் மறைத்து சிறைக்குள் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்படி, புழல் போலீசார் வழக்குபதிவு செய்து கைதிகள் கிருஷ்ணமூர்த்தி, அப்துல்ஜாபர் ஆகியோரிடம் விசாரணை நடத்துகின்றனர்.