ஈரோடு: அந்தியூரில் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.34.16 லட்சம் மோசடி செய்த அதிமுக நிர்வாகிகள் இருவர் உட்பட 7 பேர் மீது ஈரோடு வணிக குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். அந்தியூர் அருகே ஊமா ரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 2018 ஏப்ரல் 1 முதல் 21 அக்டோபர் 29 வரையிலான காலகட்டத்தில் அச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், அதிமுகவின் ஜெயலலிதா பேரவை அம்மா பேட்டை பேரூர் கழக செயலாளருமான ஈஸ்வர மூர்த்தி, துணை தலைவரான ஈரோடு புறநகர் கிழக்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 7 பேர் இணைந்து ரூ.34.16 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கந்தராஜா அளித்த புகாரின் பேரில் 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சோமசுந்தரம் என்பவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேரையும் கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.