கடலூர்: அரசு அதிகாரிகள் 3 பேர் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில், சில முக்கிய ஆவணங்கள், தங்க பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் தணிக்கை குழு அறிக்கை குறிப்புகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க செயல் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட சிலர் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 24ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் கணக்கில் வராத ₹1.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலி, உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உள்ளாட்சி தணிக்கை செய்ய வந்தபோது அங்கு நடைபெறும் முறைகேடுகளை மறைக்கும் விதமாக லஞ்சம் பெற இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து வடலூரில் உள்ள சீனிவாசனின் வீட்டிலும், கடலூர் ஆணைகுப்பத்தில் உள்ள பூங்குழலியின் வீட்டிலும், விஜயலட்சுமியின் வீட்டிலும் நேற்று காலை 7 மணி முதல் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
பிற்பகல் வரை நீடித்த இந்த சோதனையில் அதிக மதிப்புடைய சொத்து தொடர்பான ஏராளமான ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவிகள் மற்றும் தங்க பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தையும் எடுத்துச் சென்ற லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சம்பந்தப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.