அன்னூர்: கோவை மாவட்டம், அன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேனிக்கு அரசுப்பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று அன்னூரில் இருந்து தேனிக்கு சென்ற அரசு விரைவு பேருந்தில் செல்லும் பயணிகள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.தற்போது உள்ள மேற்கத்திய கலாச்சாரம் அதிகளவில் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை உட்பட பெருநகரங்களில் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், இளைஞர்கள் எல்லை மீறி பேருந்துகள் மீது அமர்ந்து பேருந்து பயணிகளையும்,ஓட்டுநர் மற்றும் கண்டக்டர்களை தொந்தரவு செய்து வந்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர் எடுத்த நடவடிக்கையால் அவற்றை முற்றிலுமாக தடை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தற்பொழுது இருந்து வருகிறது. இந்நிலையில் அன்னூர் பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்ட பஸ் டே கொண்டாட்டத்தை முன்னிட்டு பேருந்திற்கு மாலை அணிவித்தும், பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகளை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் பேருந்து முன்பு கேக் வெட்டியும் கொண்டாடினர்.
பின்னர்,வெட்டிய கேக்கினை சக பயணிகளுக்கும் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.முன்னதாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் கண்டக்டர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவப்படுத்தினர்.இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.