சென்னை: அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் டெல்லி பிரிட்டிஷ் தூதரகம் இணைந்து 3000 இளைஞர்களுக்கு விசா விண்ணப்பம் பெறுவதற்கான திட்டத்தை உயர்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று தொடங்கி வைத்தார். அண்ணா பல்கலைக் கழக விவேகானந்தர் கூட்டரங்கில் மாண்புமிகு உயர்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் பிரிட்டிஷ் தூதரக ஆணையர் அலெக்ஸ் எலிஸ் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை மற்றும் டெல்லி பிரிட்டிஷ் தூதரகம் இணைந்து Young Professionals Scheme திட்டத்தின் மூலம் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு விசா விண்ணப்பம் பெறுவதற்கான நிகழ்வு நடைபெற்றது. இதன் மூலம் நமது இந்திய இளைஞர்கள் இரண்டு வருட காலத்திற்கு பிரிட்டன் சென்று வேலை வாய்ப்பு பெறவும், பிரிட்டிஷ் இளைஞர்கள் நமது இந்தியாவில் தங்கி வேலைவாய்ப்பு பெறவும் வழி செய்கிறது. பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் பள்ளிகல்வி மற்றும் உயர்கல்வியை மேம்படுத்தி, புதுமையான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் 3 லட்சம் மாணவியர்களுக்கு மாதம் ரூபாய் 1000-ம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார்.