ராஜபாளையம்: அண்ணாமலையின் யாத்திரை பாஜவுக்கு எழுதும் முடிவுரை. மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்துக்கு வராமல் ஓடி ஒளியும் பிரதமர் மோடி நாட்டிற்கு தேவையா? என்று முத்தரசன் கடுமையாக விமர்சித்து உள்ளார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் விவசாய தொழிற்சங்க 13வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார். பின்னர் அவர் பேசியதாவது: ராமேஸ்வரம் என்பது இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் இடம். அண்ணாமலை தனது யாத்திரையை ராமேஸ்வரத்தில் தொடங்கியது மூலம் பாஜவிற்கான முடிவுரை எழுதப்பட்டு விடும் என்பதை காட்டுகிறது. விளம்பரத்திற்காக அண்ணாமலை யாத்திரை செல்கிறார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் மூன்றாவது கூட்டம் நடைபெற உள்ளது.
வருகின்ற நாடளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. அவ்வாறு அமைந்தால் அது பாஜவின் பி டீமாக தான் இருக்கும். எத்தனை அணிகள் உருவானாலும் இந்தியா அணி தான் மகத்தான வெற்றி பெறும். நாடாளுமன்றத்திற்கு வராமல் பிரதமர் மோடி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் ஆகஸ்ட் 1-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். நீதிமன்ற வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.