அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், ஜெயலலிதாவை மோசமான ஊழல் முதல்வர் என்று விமர்சித்த தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த மகளிரணியை சேர்ந்தவர்களிடம் ஒரு செய்தி தொலைக்காட்சியை சேர்ந்த நிருபர் பேட்டி எடுத்தார். அப்போது, ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை கூறிய கருத்து உங்களை எந்தளவுக்கு வருத்தமடைய செய்து இருக்கிறது என்று கேட்டார். அதற்கு ஒரு பெண், ‘எங்களுக்கு அளவுக்கு அதிகமான வருத்தமா இருக்குப்பா. அவரு கொஞ்சம் வாயை அடக்கி பேசினாருனா அது போதும்.
எங்க தலைமை என்ன சொல்லுதோ அதன்படி நாங்க நடப்போம். அவங்க எங்களுக்கு உத்தரவு கொடுக்கட்டும் அதுக்கு அப்புறம் அண்ணாமலைக்கு நாங்க பேசுறோம். நாங்க பதில் கொடுக்கிறோம். இப்போ பேச கூடாது. இதுக்கு மேல எங்க அம்மாவை பத்தி பேசுனா நாங்க வீட்டான்டாயே போய்டுவோம் மகளிருங்க. அண்ணாமலை நேத்து வந்தவரு. இந்த கட்சி 1973ல தொடங்குனது. நேத்து வந்தவரு செயல்படலனு சொல்றாரு. இது செயல்படாத பல்பு. சும்மா தேவையில்லாம அவன் பேசுனானு வெச்சுக்கோ… ஓனான் மூஞ்சே… சுடு தண்ணி பிடிச்சு மூஞ்சுல ஊத்திடுவேன் அந்த ஆள…’ என்று ஆவேசமாக தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.