ஆந்திர: சட்டப்பேரவை தேர்தலில் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிடும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்தபோது ஜெகன் மோகனுடன் ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி இருந்தார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி, 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் வரும் மே 13ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18ம் தேதி தொடங்கியது. அதன்படி பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் கடப்பா தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டி மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். முன்னதாக கடந்த 22ம் தேதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சார்பாக புலிவெந்துலா தொகுதியை சேர்ந்த உள்ளூர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.