Saturday, May 18, 2024
Home » சுற்றுலா வந்த ஆந்திரா கல்லூரி மாணவர்கள் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 5 பேர் பலி? – மாமல்லபுரத்தில் இன்று காலை சோகம்

சுற்றுலா வந்த ஆந்திரா கல்லூரி மாணவர்கள் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 5 பேர் பலி? – மாமல்லபுரத்தில் இன்று காலை சோகம்

by Suresh

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இன்று காலை கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 5 மாணவர்கள் பலியானார்கள். ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்தபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.  ஆந்திராவில் உள்ள 2 அரசு கல்லூரிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் சென்னை அடுத்த மாமல்லபுரத்துக்கு இன்று காலை வருகை தந்தனர்.

மாணவர்கள் 2 குழுவாக பிரிந்து அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர். 2 குழுவில் ஒரு குழுவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், புராதன சின்னங்களை பார்த்து விட்டு காலை 10 மணியளவில் மாமல்லபுரம் கடற்கரைக்கு ஜாலியாக நடந்து சென்றனர். கடற்கரை மணல் பரப்பில் ஒருவரையொருவர் தொட்டு விளையாடியபடி சென்றனர். கடற்கரையை அடைந்ததும் கடலில் குளிக்க முடிவு செய்தனர். அதன்படி 10 மாணவர்கள் கடலில் ஆனந்தமாக குளியல் போட்டனர்.

அப்போது திடீரென ராட்சத அலை எழும்பியது. அடுத்த சில நிமிடங்களில் 10 மாணவர்களையும் கடல் அலை இழுத்து சென்றது. அனைவரும் அலறி துடித்தனர். இதை பார்த்ததும் கடற்கரை பகுதியில் அமர்ந்திருந்த சக மாணவர்கள் மற்றும் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் சத்தம் போட்டனர். அவர்களில் சிலர் ஓடி சென்று மாணவர்களை மீட்க முயன்றனர். அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் மாணவர்களை மீட்க முடியவில்லை. அடுத்த சில விநாடிகளில் 10 மாணவர்களும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானார்கள்.

தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் மாமல்லபுரம் மீனவர் குப்பத்தை சேர்ந்த மீனவர்களும் விரைந்து வந்து படகுகளில் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், மாமல்லபுரம் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் கடலோர காவல்படை வீரர்களும் விரைந்து வந்து படகுகளில் சென்று மாணவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு 6 மாணவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களில் விஜய் (18) என்ற மாணவன், சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

மற்ற 5 பேரும் சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு வந்தனர். இறந்த மாணவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாயமான 4 மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களை மீனவர்கள், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களது நிலை என்ன ஆனது என்பது கவலைக்கிடமாக உள்ளது.
இச்சம்பவத்தால் மாமல்லபுரம் பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

4 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi