ஆந்திரா: பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தர்ஷி நகரில் வணிக வளாக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் நகரில் தர்ஷி நகரில் உள்ள அபி ஷாப்பிங் மால் உள்ளது. ஆடைகள் மற்றும் மளிகை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய ஷாப்பிங் மாலில் இன்று அதிகாலை 5 மணி அளவில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ஷாப்பிங் மால் முழுவதும் தீ பரவ தொடங்கிய நிலையில், அதனை சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைக்கும் பணியானது நடைபெற்றது. தீ அணைக்கப்பட்டாலும் மாலில் இருந்த சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்திருப்பதாக கடை உரிமையாளர் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாக தீயணைப்பு துறை மற்றும் போலீசார் தெரிவித்தனர்.