ஜெயங்கொண்டம், ஜூலை 29: நெய்வேலியில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக, விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுவதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.
அன்புமணி ராமதாஸ் கைது கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் நகர செயலாளர் பரசுராமன் தலைமையில் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைந்து போக அறிவுறுத்தினர். ஆனால் கலைந்து செல்லவில்லை. இந்நிலையில் அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா தலைமையிலான அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நகர செயலாளர் பரசுராமன் உட்பட 13 பாமகவினரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.