தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா வெளியிட்ட அறிக்கை: கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, ரேலா மருத்துவனை, பாலாஜி மருத்துவமனை மற்றும் ஹரிஹரன் மருத்துவமனை சார்ந்த சிறப்பு மருத்துவ குழுவினர் பங்கு பெற்று பொது மருத்துவம், ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி, முழு ரத்த பரிசோதனை, எக்கோ, பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல மருத்துவம், இருதய நோய் கிசிக்கை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல ஆலோசனை ஆகியவற்றுக்கு சிறப்பு சிகிச்சை ஆலோசனைகளும் முகாமில் வழங்க உள்ளனர்.
முகாமிற்கு வரும் பொதுமக்களில் புதியாக காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய உள்ள பயனாளிகள் குடும்ப அட்டை (ரேசன் கார்டு) ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும். எனவே பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உரிய மருத்துவ சிகிச்சையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.