*குடியாத்தத்தில் பரபரப்பு
குடியாத்தம் : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த புவனேஸ்வரிபேட்டை பகுதியில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் காலை மற்றும் மாலை நேரத்தில் அம்மனுக்கு பூஜை நடைபெறுகிறது. மேலும், வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. கோயிலில் ஏராளமான மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் இக்கோயிலுக்குள் நுழைந்து மைக் செட், ஸ்பீக்கர் உட்பட ₹50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்றுள்ளார்.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த நித்தியானந்தம்(22) என்பவர் கோயிலில் திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியில் சுற்றித்திரிந்த கோயிலில் திருடியதாக கூறப்படும் நித்தியானந்தத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனே அவரை மடக்கி பிடித்தனர்.
பின்னர், அவரை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிஉதை கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குடியாத்தம் டவுன் போலீசார் நித்தியானந்தத்தை பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், இதுகுறித்து வழக்கு பதிந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் திருடிய வாலிபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.