சிவகாசி: சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை தோல்விக்கு காரணமாக இருந்ததால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்பி குற்றம் சாட்டினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்பி நேற்று அளித்த பேட்டி:
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை தோல்வி அடைந்ததற்கு காரணமாக இருந்ததால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் வழக்கில், தற்போது தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது தவறானது. அமித்ஷா சென்னை வந்து சென்ற சில நாட்களில் சோதனை நடைபெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு அமித்ஷா, அண்ணாமலை தான் முழு காரணம்.
அடுத்த 10 மாதங்களில் மத்தியில் ஆட்சி மாறியவுடன் அனைத்தும் சரி செய்யப்படும். பட்டாசு, எய்ம்ஸ் உட்பட பல விஷயங்களில் அமித்ஷா தமிழகம் குறித்த புரிதல் இல்லாமல் பேசுகிறார். தமிழரை பிரதமர் ஆக்குவோம் என அமித்ஷா கூறுவது ஏமாற்று வேலை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுகவினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலை பாஜ மாநில தலைவராக இருந்து, அதிமுக கூட்டணியுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால், திமுக கூட்டணி 40 இடங்களில் வெல்வது உறுதி. இவ்வாறு தெரிவித்தார்.