வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அக்கோகீக் என்ற இடத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. திறப்பு விழாவில் இந்தியாவிலிருந்து சென்றவர்களும், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த இந்தியர்களுமாக சுமார் 500 பேர் பங்கேற்றனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கொட்டும் மழையில் ஜெய் பீம் கோஷம் முழங்க அம்பேத்கரின் சிலை திறக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவையொட்டி, பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இது இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான அம்பேத்கர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.