*எம்எல்ஏவிடம் மக்கள் கோரிக்கை
ஆம்பூர் : ஆம்பூர் அருகே பனங்காட்டூரில் சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று எம்எல்ஏவிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குடியாத்தம் சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ளது கைலாசகிரி ஊராட்சி. இந்த ஊராட்சியில் மழைகாலங்களில் மண்சாலைகள் வெள்ள நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி, நடக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதைதொடர்ந்து நேற்று அப்பகுதியில் குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன், மாதனூர் ஒன்றிய குழுதலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மண்சாலை, கால்நடை மருத்துவமனை பழுதான நிலையில் உள்ளதை அகற்றி புதிய கட்டிடம் அமைத்து தரவும், பனங்காட்டூர் பகுதியில் சுடுகாடு மழை காலங்களில் செல்ல இயலாத நிலை உள்ளதாகவும், சுடுகாட்டிற்கு உகந்த மாற்று இடம் அமைத்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு இந்த பணிகளை முடித்து தர சம்பந்தபட்ட துறை அலுவலர்களை அணுகி ஆலோசிக்க ஏற்பாடு செய்வதாக எம்எல்ஏ உறுதி அளித்தார். உடன் முன்னாள் திமுக பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மாதனூர் ஒன்றிய திமுக அவைதலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திக், ஆப்ரின் தாஜ், கார்த்திக் ஜவஹர், ஊராட்சி தலைவர் ரமணி ராஜசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.