ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து திரில் வெற்றியை பெற்றுள்ளது.சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட் செய்தது. ஜெய்ஸ்வால், பட்லர் இணைந்து ராயல்ஸ் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 35 ரன் (18 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி யான்சென் பந்துவீச்சில் நடராஜன் வசம் பிடிபட்டார்.அடுத்து பட்லருடன் கேப்டன் சாம்சன் இணைந்தார். அதிரடியாக விளையாடிய இருவரும் பவுண்டரி, சிக்சராகப் பறக்கவிட்டு மிரட்ட… ராஜஸ்தான் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பட்லர் 32 பந்திலும், சாம்சன் 33 பந்திலும் அரை சதம் அடித்தனர்.
இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 138 ரன் சேர்த்து அசத்தியது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்லர் 95 ரன் (59 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி புவனேஷ்வர் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். ராஜஸ்தான் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது. சாம்சன் 66 ரன் (38 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), ஹெட்மயர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. அபிஷேக் சர்மா அதிகபட்சமாக 55 ரன் ( 34 பந்து, 5 பவுண்டரி, 2சிக்சர்) விளாசினார். திரிபாதி 47 ரன், எடுத்தார். ராயல்ஸ் தரப்பில் சாஹல் 4 விக்கெட்டை வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் 2 புள்ளிகள் பெற்றது.