ஸ்ரீ நகர்: மூன்று நாட்களுக்கு பின் அமர்நாத் யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. காஷ்மீரில் தொடர் மழையினால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மழை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. யாத்திரை தொடங்கிய பக்தர்கள், தங்கள் வழிப்பாதைகளில் முன்னேற முடியாமல் சிக்கித் தவித்தனர். யாத்திரை மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மூன்று நாட்களுக்கு பின் நேற்று மதியம் வானிலை ஓரளவு சீரடைந்ததையடுத்து யாத்திரை மீண்டும் தொடங்கியது.
பஞ்சதர்னி மற்றும் ஷேஷ்நாக் முகாம்களில் இருந்து யாத்திரை தொடங்கியது. குகை கோவிலைச் சுற்றி வானம் தெளிவானவுடன், அதிகாரிகள் வாயில்களை திறந்து, அமர்நாத் குகைக்கோயிலுக்குள் சென்று இயற்கையாக உருவாகியிருக்கும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்தனர். தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அங்குள்ள சூழ்நிலையை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.