திருமலை: ஆழ்வார் திவ்ய பிரபந்தம் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 216 இடங்களில் வருகிற 17ம்தேதி முதல் ஜனவரி 14ம்தேதி வரை திருப்பாவை பாசுரம் பாராயணம் நடைபெற உள்ளது. புனித மாதமான மார்கழி மாதத்தில் டிசம்பர் 17ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 14ம்தேதி வரை திருப்பதி உட்பட நாடு முழுவதும் 216 மையங்களில் தலை சிறந்த சொற்பொழிவாளர்கள் மூலம் திருப்பாவை பாசுர பாராயணம் சொற்பொழிவு நடத்தப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின்கீழ் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் மார்கழி மாதத்தில் சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை நடைபெற உள்ளது. திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா கலாமந்திரத்துடன் 7 இடங்களில் திருப்பாவை பிரசங்கங்கள் பாராயணம் செய்யப்பட உள்ளது. 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் மார்கழி மாதம் விரதம் கடைப்பிடித்தார். இந்த மரபின்படி, திருப்பாவை சாத்துமொரை ஏழுமலையான் கோயில் உள்பட அனைத்து வைணவ கோயில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.