சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னமும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் சீமான் மீண்டும் தங்களின் சின்னத்தை பெற உச்சநீதிமன்றத்தை நாடினார்.
ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு அது நிலுவையில் இருக்கின்றது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கரும்பு விவசாயி இல்லை என்றாலும், வேறு சின்னத்தில் நிற்க முடிவு செய்யப்பட்டு தீப்பெட்டி, மைக், தடி, வைரக்கல் உள்ளிட்ட சின்னங்களை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு பொதுவான சின்னங்களை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது.
முதலில் முன்னுரிமை அடிப்படையில் கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாய அமைப்புக்கு கரும்பு விவசாயி சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த சீமான் கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ‘சைக்கிள்’ சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஏற்கனவே, ஜி.கே.வாசன் தரப்பில் பதிவு செய்திருந்த நிலையில் சைக்கிள் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.