சென்னை: 1000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள் வாங்க ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடை மற்றும் மீன்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரத்தில் கடந்த ஆக.18ம் தேதி நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் 1,000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு, 40% மானியத்தில் வெளிப்பொருத்தும் மற்றும் உட்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன்படி, பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு உதவிடும் பொருட்டு 2023-24ம் நிதியாண்டில் மாநில அரசு நிதியின் கீழ், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 1,000 எண்ணிக்கையிலான 28 குதிரைத்திறனுக்கு குறைவான இயந்திர சக்தியுடைய வெளிப்பொருத்தும் மற்றும் உட்பொருத்தும் இயந்திரங்களை, இயந்திரம் ஒன்றின் விலை ரூ.1.20 லட்சம் என்ற அடிப்படையில் 40 விழுக்காடு மானியத்தில் வழங்கிட நிர்வாக ஒப்புதலும் மானியத் தொகையாக மொத்தம் ரூ.4.80 கோடி நிதி ஒப்பளிப்பும் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.