சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் நண்பர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு பிரியாணி விருந்து படைத்தனர்.ரம்ஜான் பண்டிகை நேற்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கட்டி அனைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
ஏழை, எளிய மக்கள் மற்றும் நண்பர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினர். மேலும் சில இடங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் இஸ்லாமியர்கள் வழங்கினர். ரம்ஜானை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பிராட்வே டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் நேற்று காலை 7.50 மணிக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பெருநாள் உரை நிகழ்த்தினார்.
இதே போல, சென்னை திவூத்திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் திருவல்லிக்கேணி, பெரியமேடு ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். தொழுகையை நிறைவு செய்து விட்டு வெளியே வந்த இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு புத்தாடை, உணவு பொட்டலங்கள், பணம் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினர். ரமஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்ற இடங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் வெளியே பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.