மதுரை : மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.21ம் தேதி தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்ட அழகருக்கு 22ம் தேதி அதிகாலை மூன்றுமாவடியில் மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து 23ல் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் எழுந்தருளினார். ஏப்.24ம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதாரம் நடந்தது. ஏப்.26ல் பூப்பல்லக்கு முடிந்ததும், மலையை நோக்கி அழகர் புறப்பட்டார்.
நேற்று காலை கோயில் கோட்டை வாசலை வந்தடைந்தார். அங்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்கப்பட்டார். காலை 11.55 மணிக்கு இருப்பிடம் வந்தடைந்த அழகரை 2 டன் மலர்கள் தூவி பக்தர்கள் வரவேற்றனர். பெண்கள் வெண்பூசணியில் சூடம் ஏற்றி திருஷ்டி கழித்த பின் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். இன்று காலை உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.