புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்காக 26.5 லட்சம் மை குப்பிகளை தயாரிக்கும் பணியில் கர்நாடக நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வரும் ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலின் போது கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் அழியாத மை தான் வாக்களிக்கும் போது கை விரலில் வைக்கப்படும்.மக்களவை தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் மை தயாரிக்க மைசூரு பெயின்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆர்டர் அளித்துள்ளது. இதில், அந்த நிறுவனத்துக்கு ரூ.55 கோடி கிடைத்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகமது இர்பான்,‘‘ மக்களவை தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் 26.5 லட்சம் குப்பி மை தயாரிக்க கடந்த டிசம்பரில் ஆர்டர் வழங்கியது. தற்போது வரை 24 மாநிலங்களுக்கு மை குப்பிகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள மாநிலங்களுக்கு வரும் மார்ச் 20ம் தேதிக்குள் சப்ளை செய்யப்பட்டு விடும்’’ என்றார்.