மும்பை: புகைப்பிடித்துக் கொண்டே விமான இருக்கையில் ‘ஆய்’ போன பிரான்ஸ் நபர் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா புறப்பட்ட பாரிஸ் – மும்பை இடையிலான விமானத்தில் 36 வயதான பிரான்ஸ் நாட்டு பிரஜையும் பயணித்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அவரது இருக்கயைில் அமர்ந்து கொண்டு புகைப்பிடித்தார். பின்னர் அவரது இருக்கையில் அமர்ந்தவாறே மலம் கழித்துள்ளார்.
அதனால் அருகில் அமர்ந்திருந்த பயணி, பெரும் பீதியுடன் விமான பணியாளர்களிடம் ஓடிவந்து புகார் அளித்தார். அவர்கள், அந்தப் பயணியை இருக்கையில் இருந்து வெளியேற்றி, விமான பணியாளர்கள் அமருகின்ற இருக்கையின் அருகில் தரைதளத்தில் அமரவைத்தனர். பின்னர் அந்த நபர் அமர்ந்திருந்த இருக்கையை சுத்தப்படுத்தினர். இருந்தாலும் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது பிரான்ஸ் பிரஜையின் செயல், மற்ற பயணிகளை முகம் சுளிக்க வைத்தது. இந்த விமானம் நேற்று முன்தினம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த நபரை பிடித்து சஹார் போலீசாரிடம் விமான பணியாளர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட பிரான்ஸ் பிரஜையான கவுடியர் ஹென்றி ப்ரூக்ஸ் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்’ என்றனர்.