சென்னை: அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் புதிய அமைப்பை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி, நிர்வாகிகளை நியமித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பூதாகரமாகி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இதனையடுத்து, இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அக்கட்சி கொடி, பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வருவதாக கூறி, எடப்பாடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், ஓபிஎஸ் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும், தீர்ப்பு வரும் வரை அதிமுக கொடி, பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு எனும் பெயரில் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இதைதொடர்ந்து உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர், மாநில பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் பதவிகளுக்கான நியமனங்களை அறிக்கையாக ஓபிஎஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.