ராமநாதபுரம் மக்களவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து, நேற்று பரமக்குடி பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனர் கருணாஸ் பேசியதாவது: திருமணம் செய்யாதவர் எல்லாம் முத்துராமலிங்க தேவராக முடியுமா?. தேவரும், மோடியும் ஒன்று என சொல்லும் அண்ணாமலை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். வேட்டி, சட்டை அணிந்து கொண்டால் தமிழனாக முடியுமா?. மதுரை, ராமநாதபுரம் உள்ள அனைத்து பகுதிகளிலும் வட இந்தியர்கள் வந்து விட்டனர். தமிழகத்தை எப்படியாவது வட இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது பாஜவின் நோக்கம். மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு சர்வாதிகார நாடாக மாறிவிடும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை ஆதரிக்கிறார். ஒரு தரப்பினர் பிரதமராக மோடி வர வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் எடப்பாடி யார் பிரதமராக வரவேண்டும் என கூறுகிறார்.
பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் தலை இல்லாத முண்டத்துக்கு எடப்பாடி ஏன் வாக்கு கேட்கிறார். கொடநாட்டில் 5, 6 கொலைகள் நடந்தது. ஒரே நேரத்தில் எப்படி ஐந்து பேர் இறந்தார்கள்? அன்று முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தான் இருந்தார். கொடநாட்டில் இத்தனை கொலை நடைபெற்றதை விசாரிக்கவில்லை. இதைவிட உங்களின் லட்சணம் என்னவாக உள்ளது. கூவத்தூரில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், ஜெயலலிதாவின் படத்திற்கு முன்பாக அகல் விளக்கு ஏற்றி சசிகலா காலில் விழுந்து சத்தியம் வாங்க வைத்தனர். சசிகலா கட்சி முக்கியம் என்பதால் எடப்பாடியிடம் கட்சியை ஒப்படைத்தார். பதவி முக்கியம் என நினைத்திருந்தால் மோடியிடம் போய் கும்பிடு போட்டு இருப்பார். இவ்வாறு பேசினார்.