நெல்லை: நெல்லை பேட்டையில் அதிமுக பிரமுகர் பிச்சைராஜ் நேற்று இரவு சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நெல்லை பேட்டை அருகேயுள்ள மயிலப்புரத்தைச் சேர்ந்தவர் பிச்சைராஜ் (52). அதிமுக பிரமுகரான இவருக்கு மனைவி மற்றும் மகள், மகன் உள்ளனர். பேட்டை ரூரல் பஞ். முன்னாள் துணைத்தலைவராக பதவி வகித்த இவர் கடந்த மாநகராட்சி தேர்தலில் 18வது வார்டில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டவர். பேட்டை எம்ஜிஆர் நகரில் டாஸ்மாக் பார் மற்றும் கிளப் நடத்தி வந்த பிச்சைராஜ், நேற்று இரவு 9.30 மணி அளவில் பாரில் இருந்து பேட்டை பஜாருக்கு செல்வதற்காக பேட்டை ரயில் நிலையம் அடுத்த சுரங்கப்பாதை வழியாக தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிச்சைராஜை, தகவலறிந்து விரைந்து வந்து மீட்ட உறவினர்கள் பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட முதலுதவியைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பிச்சைராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். துகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.