நாகப்பட்டினம் அவுரித்திடலில் நேற்று முன்தினம் இரவு அதிமுக பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கரை ஆதரித்து அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வைகைசெல்வன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜ முனைப்பு காட்டியது. ஆனால் எடப்பாடியார் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் பாஜ தலைமை, எடப்பாடி பழனிசாமியை மிரட்டியது. அதிமுகவை இரண்டாக உடைப்போம். அதிமுகவின் முக்கிய புள்ளிகள் வீடுகளில் ஈடி ரெய்டு நடத்துவோம். அதிமுகவினரை தூக்கி விடுவோம் என்று எல்லாம் மிரட்டினர். ஆனால் எடப்பாடியார், எம்ஜிஆர் வழியை பின்பற்றி எதற்கும் அஞ்சாமல் பாஜவுடன் கூட்டணி வைக்கவில்லை.
பாஜவில் இணைந்துள்ள கூட்டணி கட்சி தலைவரான பாரிவேந்தர் பூரி வேந்தர். அந்த கட்சியின் தலைவர் அவரே. உறுப்பினர் அவரது மகன். ஏ.சி சண்முகம் கட்சிக்கு அவரே தலைவர், அவர் டிரைவர் அந்த கட்சியின் உறுப்பினர். அதுபோல ஜான்பாண்டியன் அவரே தலைவர். அவரே உறுப்பினர். நடிகையாக இருந்தும் ராதிகாவை பார்க்க கூட யாரும் வரவில்லை. இதனால் அவர் பிரசாரம் செய்வதை நிறுத்தி விட்டார். டிடிவி தினகரன் கட்சி நடத்தவில்லை. கம்பெனி தான் நடத்துகிறார். அமமுக கட்சி என்பது கறிக்கோழி போன்றது. அது தின்று கொழுத்து போகுமே தவிர குஞ்சு பொரிக்காது.
பாஜ கடந்த 10 ஆண்டு காலத்தில் ஊழல் செய்யாமல் ஆட்சி செய்துள்ளது என டிடிவி தினகரன் பேசுகிறார். ஆனால் அவர், சின்னத்துக்காக ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றவர். இதனால் அவர் பாஜவிற்கு நல்ல சான்று கொடுப்பது கேலிக்கூத்தானது. பாஜவின் ரெய்டுக்கு பயந்து இரண்டு சீட்டு பெற்று கொண்டவர். குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் தேர்தலில் டெபாசிட் இழப்பார். பலாப்பழம் சின்னத்தில் நிற்கும் ஓ.பன்னீர்செல்வம் எங்கெல்லாம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் விஸ்வரூபம் எடுப்பேன் என கூறிக்கொண்டு வாக்கு சேகரிக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் விஸ்வரூபம் படம் எடுத்தாலும் சரி, பாபநாசம் படம் எடுத்தாலும் சரி, அந்த படம் தமிழகத்தில் ஓடாது.
தமிழ்மாநில கங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அவர் வீட்டில் சமையல்காரர்கள். அதிமுக கழற்றி வீசிய கோவணம் இன்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கழுத்தில் அங்கவஸ்திரமாக உள்ளது. இப்படி இருக்கும் போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜவின் பருப்பு தமிழகத்தில் வேகாது. நோட்டாவுக்கு கீழே பாஜ செல்லும்.இவ்வாறு அவர் பேசினார். பாஜவுடன் கூட்டணி வைத்து உள்ள கட்சிகளில் உறுப்பினர்கள் எல்லாம் வீட்டில் சமையல்காரர்கள், டிரைவர் போன்றவர்கள்தான். முக்கிய உறுப்பினர்கள் என்று பார்த்தால் அந்த கட்சியில் உள்ள தலைவர்கள்தான் என்று பாஜ கூட்டணியை வைகை செல்வன் செமையாக கலாய்த்து உள்ளார்.