திருவள்ளூர்: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். நகர, ஒன்றிய செயலாளர்கள் செயலாளர் கந்தசாமி, சூரகாபுரம் சுதாகர், ராமஞ்சேரி மாதவன், பள்ளிப்பட்டு சீனிவாசன், இ.என்.கண்டிகை ரவி, சக்திவேல் ஆகியோர் வரவேற்றனர். கிறிஸ்தவ மத போதகர்கள் பிரான்சிஸ், மேஷாக் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது அவர், மக்களின் நலனுக்காக திட்டங்களை கொடுக்க கூடிய இயக்கமாக அதிமுக திகழ்கிறது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அதிமுக பொதுச் செயலாளர் நேரடியாக சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார் என்றார். முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பேசும்போது, அதிமுக சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் இயக்கம். இனி வரும் காலத்தில் பாஜகவுடனான கூட்டணி நிச்சயம் இருக்காது. இவ்வாறு அவர் பேசினார். இதில் இன்பநாதன், பேரம்பாக்கம் சந்திரசேகர், சிற்றம் சீனிவாசன், எழிலரசன், எஸ்.ஞானகுமார், பாலாஜி உள்பட கலந்து கொண்டனர்.