தேனி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாருடன் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆண்டிபட்டி நகர் பகுதியில் தெப்பம்பட்டி சாலை பிரிவு அருகே அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருந்தனர். அப்போது மதுரை – தேனி நெடுஞ்சாலை வழியாக அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரன் வந்து கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த தொண்டர்கள் மற்றும் பெண்கள் அதிமுக வேட்பாளர் தான் வந்து விட்டார் என நினைத்து டிடிவி.தினகரன் வந்த வாகனத்திற்கு மலர்தூவி வரவேற்றனர். தம்மை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் வந்திருப்பதாக உற்சாகமடைந்த டிடிவி.தினகரன் குக்கரை உயர்த்திக் காட்ட, அங்கிருந்த தொண்டர்கள் இரட்டை இலையை உயர்த்தி காட்டினர். மேலும் அவர்கள் கையில் அதிமுக கொடி இருந்ததைப் பார்த்த டிடிவி வரவேற்பு தமக்கில்லை என புரிந்துகொண்டு ஏமாற்றமடைந்தார். அங்கிருந்த தொண்டர்களும் வந்தவர் டிடிவி.தினகரன் என தெரிந்துகொண்டு உற்சாகமிழந்து நகர்ந்து சென்றனர்.