கோவை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அறிமுக கூட்டம் கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பிவேலுமணி தலைமை தாங்கினார். இதில், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசியதாவது: பாராளுமன்றத்தில் செந்தமிழில் கேள்வி கேட்டால், தமிழில் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் ஆங்கிலத்தில் பதில் சொல்லவும் தயாராக இருக்கிறேன்.
இந்தியில் கேள்வி கேட்டால், இந்தியில் பதில் சொல்லவும் தயாராக இருக்கிறேன். தெலுங்கில் கேள்வி கேட்டால் தெலுங்கிலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். (சொன்ன அனைத்து மொழிகளிலும் பேசி காட்டினார்). அதிமுகவின் ஆயிரக்கணக்கான தொண்டர்களை நம்பிதான் எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு சீட் கொடுத்துள்ளார்கள். இந்த நேரத்தில், மீடியாவிலேயே பேசிக்கொண்டு இருக்கும் அண்ணாமலைக்கு ஒரு சவால் விடுக்க விரும்புகிறேன்.
கோவையில எங்க வேண்டுமானாலும் மேடை போடுங்கள், என்ன மொழியில் வேண்டுமானாலும் பேசலாம். எத்தனை பேரை வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். பா.ஜ.க நிர்வாகிகளை வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். கோவை வளர்ச்சிக்காக பேச நான் தயார். நீங்கள் தயாரா..? தயார் என்றால், நேரம், நாள், இடம் குறியுங்கள். வருகிறேன். வருகிறேன்… வருகிறேன்…. அண்ணாமைலையை எதிர்த்து ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்போம் என்றார்கள். இல்லை… இல்லை… அதைவிட பல மடங்கு வித்தியாசத்தில் ஜெயிப்போம். அண்ணாமலை ஐ யம் வெயிட்டிங். இவ்வாறு அவர் பேசினார்.
* ஒரே மாதிரி பேசும் கரூர், கோவை வேட்பாளர்கள்
அண்ணாமலைக்கு சவால் விட்டு பேசிய கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இந்தி உள்ளிட்ட பல மொழிகள் பேசிய எங்க பேச வேண்டும் என்று சொல்லுங்கள் தயாராக இருக்கிறேன் என்றார். இதே பாணியைதான் கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவும் கையில் எடுத்து, போகிற இடமெல்லாம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பேசி அண்ணாமலைக்கு சவால் விடுத்து வருகிறார். அண்ணாமலையின் சொந்த ஊரில் கரூரிலும், அவர் போட்டியிடும் கோவையிலும் அதிமுக கையில் எடுத்துள்ள யுக்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
‘ஆடு கசாப்பு கடைக்குதான்’
கோவை மாவட்ட அதிமுக சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் பேசுகையில், ‘இப்போது நடைபெறுகிற தேர்தலில் அதிமுககாரனுக்கும், திமுககாரனுக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது. ஆனால், இந்த கோட்டையில், இடையில் அண்ணாமலை என்கிற ஆடு புகுந்துள்ளது.
சிங்கத்தின் கோட்டைக்குள் ஆடு புகுந்தால் என்ன ஆகும்? என்று உங்களுக்கே தெரியும். இதுவரை இல்லாத அளவுக்கு இம்முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம். நம் கட்சியில் இருந்து வெளியேறி சென்றவர் நம்மிடம் தோல்வி அடைவார். ஆடு கசாப்பு கடைக்கு சென்றுவிடும். இவ்வாறு கல்யாணசுந்தரம் பேசினார்.