சென்னை: அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ல் வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் புகுந்த ஒபிஎஸ் தரப்பபினர் அலுவலகத்தில் இருந்த சொத்து ஆவணங்களை சூறையாடி சென்றதாக இபிஎஸ் தரப்பில் அளித்த புகாரின் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேபோல, அன்றைய தினம் அதிமுக அலுவலகம் சென்ற தங்களை எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் குண்டர்கள் தாக்கியதாக ஒ.பி.எஸ். ஆதரவாளரான ஜே.சி.டி. பிராபாகர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம், தி.நகர் சத்தியா, ஆதி ராஜாராம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியிருந்தார். இந்த நிலையில், இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி ஜே.சி.டி. பிராபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஜெ.சி.டி. பிராபாகர் கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, புகாரில் முகாந்திரம் இருந்தால் இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.