சென்னை: அதிமுகவில் உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுகவில் உறுப்பினர்களாக சேருவதற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக்கெடுவை நீட்டித்துத் தருமாறு, நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது, மாநாட்டு குழு உறுப்பினர்களும், மாவட்ட செயலாளர்களும் கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வருகிற 17ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதியான வாய்ப்பாகும்.
புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகளை பெற்றுள்ள அதிமுகவினர் மட்டுமே, கட்சி பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், அமைப்பு தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர்கள்.